இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்தும் அரசியலில் நீடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் சவால்களுக்கு மத்தியில் தான் பெற்ற வாக்கு முடிவுகளை ஏற்றுக்கொள்வதாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நாட்டிற்காக தான் ஆற்றிய கடமைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த மகிந்த ராஜபக்சா, கடந்த திங்களன்று நடந்த பொதுத் தேர்தல் மூலம் மீண்டும் நாடாளுமன்ற அரசியலுக்குள் வருகிறார்.
அவர் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பால் இந்தத் தேர்தலில் ஆட்சியமைக்கும் அளவுக்கு இடங்களை வெல்ல முடியவில்லை. அதனால் இந்தத் தேர்தல் மூலம் மீண்டும் பிரதமராகும் மகிந்த ராஜபக்சாவின் எதிர்பார்ப்பு தோல்வியில் முடிந்து போயுள்ளது..
தனது சொந்த மாவட்டத்துக்கு வெளியில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்சா, அவரது அணி வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளில் 89 சதவீதம் அளவுக்கு வாக்குகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.