இரண்டு நாட்களுக்கு முன் கருத்துக் கணிப்பு குறித்த பத்தியொன்றை ”டானியல் லீபிளாங்” என்ற பத்தி எழுத்தாளர் ‘குளோபல் மெயில்’ ஏட்டில் எழுதியுள்ளார். அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வாரங்களில் ”யஸ்ரின் ரூடோவின்” செல்வாக்கு அதிகரித்து வருகின்றது. முக்கியமாக ஒன்ராரியோ மாகாணத்தில் இந்தச் செல்வாக்கு அதிகரிப்பு அபரிமிதமாகக் காணப்படுகிறது. 2119 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு ஆய்வொன்றில் இவ்வாறான முடிவு பெறப்பட்டுள்ளது. இதனால் ஒக்ரோபர் 19ஆம் தேதி சிறுபான்மை அரசு ஒன்று அமைக்கப்படுவதற்கான திசையை நோக்கியே தேர்தல் களம் நகர்ந்து கொண்டிருக்கிறது.
தேசிய அளவில் என்.டி.பி 31 சத வீதத்திலும் லிபரல்கள் 30 சத வீதத்திலும் பழமைவாதக் கட்சி 28 சத வீதத்திலும் உள்ளதாகவே இக் கருத்தக் கணிப்பு சுட்டியுள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பில் என்.டி.பிக்கு சாதகத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக அமைவது கியூபெக்கில் அந்தக் கட்சிக்கு இருக்கும் மிகப் பெரிய ஆதரவே!
செப்ரம்பர் 17ஆம் தேதி கட்சித் தலைவர்களுக்கிடையில் ஹல்கேரியில் விவாதம் நடைபெற உள்ளது. இது கனடியப் பொருளாதாரம் பற்றிய விவாதமாகும். இந்த விவாதம் வாக்காளர்கள் தங்களது இறுதி நிலைப்பாட்டை எடுப்பதில் முக்கிய பங்கினை ஆற்றும் எனக் கருதப்படுகிறது.