இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் நுழைந்து மீன்பிடிப்பது தொடர்பில் இரண்டு நாட்டு மீனவர் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் இலங்கை மீனவர் பிரதிதிநிதிகள் கலந்து கொள்வது குறித்து இலங்கை மீனவர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். இந்தியப் படகுகள் இலங்கை வட பகுதி கடலில் மீன் பிடிப்பதற்கு அப்பகுதி மீனவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.கடல் தொழில் இணையங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசிய கிளிநொச்சி மாவட்ட கடல் தொழிலாளர் சம்மேளனத்தின் ஆலோசகர் விநாயகமூர்த்தி சகாதேவன், இந்திய – இலங்கைப் பிரதமர்கள் சந்தித்தபோது இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான உரிமையை சட்டரீதியாக வழங்குமாறு இந்தியப் பிரதமர் கேட்டுக் கொண்டது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 23ஆம் தேதி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிடட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.இந்தியப் பிரதமரின் இந்தக் கோரிக்கைக்குப் பின்னர் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் அதற்கான இழப்பீடுக்களை இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்க போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
(பிபிசி தமிழோசை)
இதுவரை காலமும் இருநாட்டு மீனவர் பிரதிநிதிகளும் தமது அரசின் அங்கீகாரம் இல்லாமல் சாதாரண பேச்சுக்களையே மேற்கொண்டு வந்ததால் எந்தவித பிரயோசனமும் ஏற்பட்டிருக்கவில்லை என்பதால், எதிர்காலத்தில் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இரு நாட்டு அரசாங்கத்தின் தலையீட்டுடனேயே நடத்தப்பட வேண்டும் என்ற முடிவிற்கும் வந்துள்ளனர்.
வட மாகாணத்தில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட கடல் தொழிலாளர்கள் சங்கங்களின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.