இலங்கையின் மலையகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. ரம்போட மண் சரிவில் 5000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.
நுவரெலியா மாவட்டம் ரம்பொட பகுதியில் இடம்பெற்ற இந்த மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் இரு பெண்களும் 10 வயதுக்குட்பட்ட நான்கு சிறார்களும் அடங்குவர்.
மண்சரிவு காரணமாக தமது இருப்பிடங்களை இழந்துள்ள குடும்பங்கள் தற்போது அந்த பகுதியிலுள்ள அரசாங்க பாடசாலையொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கொத்மலை பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அந்த பிரதேசத்தில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக மேலும் சில குடும்பங்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளன.
மண் சரிவினால் பாதிக்கப்பட்ட இடத்தை மலை நாட்டு புதிய கிராம உடகட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் நேரில் சென்று பார்வையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மலையகத்தில் சுமார் 5000 குடும்பங்கள் மண் சரிவு அபாயத்தை எதிர்நோக்கிய குடியிருப்புகளிலே தற்போது வசிப்பதாகவும் அமைச்சர் திகாம்பரம் பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
வீடுகளை இழந்துள்ளவர்களுக்கு விரைவாக மாற்று வீடுகளை ஏற்படுத்திக் கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு கூறுகிறது.
(பிபிசி தமிழோசை)