(முகப்புப் படம் அல்ஜஸீரா)
இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் 86 பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஜெயலலிதா இன்று விடுத்திருக்கும் அறிக்கையில், அக்டோபர் 28ஆம் தேதி இவர்கள் விடுதலைசெய்யப்படுவார்கள் என்றும் இவர்களைத் தமிழகத்திற்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ளுமென்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோல, தமிழக சிறையில் உள்ள இரண்டு இலங்கை மீனவர்களை நல்லெண்ண நடவடிக்கையாக விடுவிக்க மத்திய அரசு கூறியிருப்பதன் பேரில், அவர்கள் 28ஆம் தேதி விடுவிக்கப்படுவார்கள் என்றும் இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை மீனவர் பிரச்சனை தொடர்பாக பிரதமருக்கு 73 கடிதங்களை தான் எழுதியுள்ளதாகவும் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
இலங்கைச் சிறைகளில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டுமென ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தைத் துவங்கியிருந்தனர்.
(பிபிசி தமிழோசை)