கனடிய அரசு ஜோர்தானின் தலைநகரான அம்மானில் கனடா வரவுள்ள சிரிய அகதிகளின் நலன்களைப் பேணுமுகமாக ஞாயிற்றுக்கிழமை அலுவலகமொன்றை திறந்துள்ளது.
25,000 சிரிய அகதிகளை கனடாவிற்குள் கொண்டு வரும் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டுக்கான திட்டத்தின் முதல் கட்டமாக மூன்று கனடிய அமைச்சர்கள் தலைநகர் அம்மானில் முகாமிட்டுள்ளனர். மேலும் 90 அலுவலர்கள் அடங்கிய குழுவொன்றும் ஜோர்டான் செல்ல உள்ளது.
குடிவரவு அமைச்சர் ஜோன் மக்கெலும், சுகாதார அமைச்சர் ஜேன் பில்பொட் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜிட் சய்ஜான் ஆகிய மூன்று அழைச்சர்களே தற்பொழுது ஜோர்தானில் நிலைகொண்டுள்ளார்கள்.
சனிக்கிழமை அம்மான் சென்ற இவர்கள் மூவரும் அனத்துலக உதவிக்கான அலுவலர்கள் மற்றும் ஐ.நா. அலுவலர்களை ஜோர்டான் தலைவர்களையும் சந்தித்து விட்டு ஒட்டாவா திரும்ப உள்ளனர்.
ஜோர்டானில் சிரிய அகதிகளின் விண்ணப்பங்கள் தேர்வுக்கு உள்ளாக்கப்பட்டு பிப்ரவரி மாத இறுதிக்குள் 25000 அகதிகளும் அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அமைக்கப்பட்ட அலுவலகத்தின் உச்சம் நாளொன்றிற்கு 500 அகதிகள் என்ற செயல் முறைக்கு உள்ளாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் கவனமாகக் கையாள வேண்டிய பிரச்சனையாக இருப்பது மருத்துவ அறிக்கை தொடர்பானதாகும்.
இந்த வருட முடிவிற்குள் பத்தாயிரம் சிரிய அகதிகள் குடியமர்த்தப்படுவர். கனடிய அரசின் அறிக்கையின்படி நொவம்பர் 4ம் தேதியிலிருந்து 153 சிரிய அகதிகள் கனடாவிற்கு வந்துள்ளதாகவும் 928 அகதிகளுக்கு விசா வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிய வந்துள்ளது.