தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புகளை சரி செய்ய உடனடி நிவாரணமாக ரூ. 5,000 கோடி வழங்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் ஜெயலலிதாவும் வியாழக்கிழமை பார்வையிட்டனர். பிறகு பிரதமர் மோடியை சந்தித்து மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை விளக்கினார். தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நிவாரணப் பணிகளையும் எடுத்துரைத்தார்.
தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிப்புகள் மிகக் கடுமையாக இருப்பதால் மீட்பு, நிவாரணப் பணிகளுக்கு உடனடியாக ரூ. 5 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என பிரதமரிடம் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று உடனடியாக ரூ. 1,000 வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
தமிழகத்துக்கு கூடுதலாக 10 ராணுவ குழுக்களையும், 20 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்களையும் அனுப்ப வேண்டும் என்ற முதல்வரின் கோரிக்கையையும் பிரதமர் ஏற்றுக் கொண்டார். இதற்காக பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்தார்” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(தி இந்து)