சுவிஸில் தேடப்பட்டுவந்த ISIS தீவிரவாத அமைப்பின் நான்கு சந்தேகநபர்கள் குறித்த விசாரணையிலிருந்து ஜெனீவா, ரொரன்ரோ, சிக்காக்கோ ஆகிய நகரங்கள் அவர்களின் தாக்குதல் இலக்காக இருக்கக்கூடுமென பத்திரிகைச் செய்தியொன்று தெரிவிக்கின்றது.
சுவிஸில் தேடப்பட்டுவந்த ISIS இற்கு ஆதரவான ஐந்தாவது சந்தேகநபர் ஒருவர் வெளியிட்ட ஒளிநாடாவில் வன்கூவர், ஒட்டாவா, ஜெனீவா ஆகிய நகரங்கள் மீதான தமது எதிர்காலத் தாக்குதல் பற்றிப்பேசியதாக இன்னொரு பத்திரிகைச்செய்தி தெரிவிக்கின்றது.
அமெரிக்க மத்திய உளவு நிறுவனமான CIA இவைபற்றி சுவிஸ், கனேடிய புலனாய்வுப்பிரிவினருடன் முக்கியமான தகவல்களைப் பரிமாறி அனைவரையும் உசார்நிலையில் வைத்திருப்பதாக மூன்றாவது பத்திரிகைச்செய்தி தெரிவிக்கின்றது.
இதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு எவ்வித இடரும் நேராவண்ணம் அவர்களைப்பாதுகாப்பதே தமது தலையாய கடமையென்று RCMP பொதுமக்களுக்கு அறிக்கைமூலம் தெரியப்படுத்தியுள்ளது.
RCMP சுவிஸ், அமெரிக்க புலனாய்வுப் பிரிவினருடனும் திட்டமிட்டபடி இணைந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. மிகமுக்கியமாக எவராவது சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடினாலோ அன்றி வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கண்ணுற்றாலோ உடனடியாகச் செயற்படுமாறு கோரப்படுகின்றனர்.
அவ்வாறான தகவல்களை அண்மையில் உள்ள பொலீஸ் நிலையத்தில் முறையிடும்படியோ அல்லது கனேடியத் தேசியத் தகவல் தொடர்பகத்துக்கு 1 – 800 – 420 – 5805 என்னும் தொலைபேசி இலக்கத்தில் அழைத்துத் தெரிவிக்குமாறோ RCMP பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.