வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் மருத்துவர் விவியன் பாலகிருஸ்ணனனை வடக்கு சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் நேற்று (19.07.2017) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணம் மருத்துவ பீடத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது வடக்கின் சுகாதார துறை அபிவிருத்தி தொர்ப்pல் கலந்துரையாடப்பட்டதாக வடக்கு சுகாதார அமைச்சரின் ஊடக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது சிங்கப்பூர் அரசின் அனுசரணையுடன் யாழ்ப்பாணம் மருத்துவ பீடம் மற்றும் யாழ்போதனா வைத்தியசாலைகளில் என்புமுறிவு சிகிச்சை தொடர்பான விசேட பிரிவுகள் அமைப்பது தொடர்பான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
போரிற்கு பின்னரான சூழ்நிலையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட சிகிச்சை பிரிவுகளை ஆரம்பித்தல் தொடர்பிலும் சுகாதார துறைசார் ஊழியர்களுக்கான திறன்விருத்தி பயிற்சிகள் வழங்குவதற்கும் சிங்கப்பூர் அரசாங்கம் உதவி வழங்கவேண்டுமென வடக்கு சுகாதார அமைச்சர் வெளியுறவு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சர் அதற்கான திட்ட முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படுமிடத்து தங்கள் அரசாங்கம் வடக்கு மாகாண சுகாதார அமைச்சுடன் இணைந்து செயற்பட தயாராகவுள்ளதாக உறுதியளித்தார்.